படிக்கட்டில் உட்கார்ந்து பயணித்த போது ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவன் பலி

சென்னை: படிக்கட்டில் உட்கார்ந்து பயணித்த போது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், புட்லூரை சேர்ந்த அஸ்வந்த் (17), காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த இவர், கடந்த 4ம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்து நேற்று காலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடிக்கு சென்று கொண்டு இருந்தார். ரயில் படிக்கட்டில் உட்கார்ந்து அஸ்வந்த் பயணம் செய்துள்ளார்.

காட்பாடி அருகே ரயில் வந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென ரயிலில் இருந்து அஸ்வந்த் தவறி கீழே விழுந்தார். ரயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post படிக்கட்டில் உட்கார்ந்து பயணித்த போது ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: