நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விருது

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், நகராட்சியில் பணியாற்றி 164 பெண் மற்றும் ஆண் தூய்மை பணியாளர்களில் 40 பணியாளர்களை சிறந்த பணியாளர்களாக தேர்வு செய்து விருது மற்றும் சமபந்தி வழங்கும் விழா நந்திவரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், நகராட்சி ஆணையாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கலந்துகொண்டு 40 தூய்மை பணியாளர்களுக்கு சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கினார்.

இதேபோல், கடந்த ஆண்டு கனமழை பெய்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறப்பாக பணியாற்றிய வார்டு கவுன்சிலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, 164 தூய்மை பணியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி அசைவ விருந்தினை வழங்கினார். இதில், வார்டு கவுன்சிலர்கள் ரவி,ஸ்ரீமதிராஜி, சதீஷ்குமார்,ஸ்ரீமதிடில்லி, நக்கீரன், சசிகலா செந்தில், ஜெயந்தி ஜெகன், திவ்யா சந்தோஷ்குமார், அம்பிகா பழனி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: