கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது

திருத்தணி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்டைய்யா. இவரது மனைவி லதா(48). இவர் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதம் 22ம் தேதி 29 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1.25 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து, மீண்டும் 2வது முறையாக 3 நாட்களுக்கு முன்பு அதே கடையில் 20 கிராம் நகை எடுத்து வந்து அடகு வைத்துவிட்டு ரூ.90 ஆயிரம் பணத்தை பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், லதாவின் நடவடிக்கையில் சந்தேகடைந்த நகை கடை உரிமையாளர் அவர் அடகு வைத்த நகைகளை எடுத்து சோதனை செய்துள்ளார். அப்போது, லதா அடகு வைத்த நகை அனைத்தும் போலி நகை என தெரியவரவே நகை கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் உதவி காவல் ஆய்வாளர் மாலாவிடம் கடை உரிமையாளர் புகாரளித்துள்ளார்.

அதில், 49 கிராம் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.15 லட்சம் வரையில் பணமோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில், போலி நகைகளை அடகு வைத்து பணமோசடி செய்த லதாவை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வேறு ஏதேனும் பணமோசடியில் இவர் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: