மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்

மஞ்சூர் : ‘தினகரன் செய்தி’ எதிரொலியாக, மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 200 மரங்களை வனத்துறையினர் வெட்டி அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர், கோரகுந்தா, அப்பர்பவானி, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன.

குறிப்பாக மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலா பகுதியில் இருந்து கிண்ணக்கொரை வரை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், காற்று, மழை உள்ளிட்ட சமயங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுவது வாடிக்கையாக உள்ளது.

சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது அதிகளவில் மரங்கள் விழுந்து வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பினரும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து கிண்ணக்கொரை சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்து அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இதில் சுமார் 210 மரங்கள் எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியதை தொடர்ந்து மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

The post மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: