×

தேவதானப்பட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

தேவதானப்பட்டி, அக் 7: தேவதானப்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து அட்டணம்பட்டி வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

தேவதானப்பட்டியின் முக்கிய சாலையோரத்தில் மீன் கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், சிக்கன் கடைகள் என பல்வேறு கடைகள் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் கழிவுகள் சாலையோர பள்ளங்களில் கொட்டுப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாமிச கழிவுகளை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் அதிகளவில் சாலையில் கூடுகிறது.

அப்போது நாய்கள் சண்டையிட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் மேல் மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. காலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்த தெருநாய்கள் தொல்லையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தேவதானப்பட்டி மெயின்ரோடு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devdhanapatti ,Devadanapatti ,Government Primary Health Center ,Attanampatti ,Dinakaran ,
× RELATED பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...