×

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 17,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. வார விடுமுறையான இன்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 8,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 12,713 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 92.84 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 92.60 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 55.67 டிஎம்சியாக உள்ளது.

The post நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan Falls ,Bennagaram ,Cauvery ,Okanagan ,Dharmapuri district ,Okenakal ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!