×

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெறுப்பு அரசியலின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்டு வன்முறை பூமியாக மாற்றப்பட்ட மணிப்பூருக்கு கடந்த ஜூலை மாதம் 3வது முறையாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைத்து நிவாரண பொருட்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினார். ஒன்றிய அரசுத்துறைகளில் உயர் பதவிகளில் 45 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் முறையில் தேர்வு செய்ய ஒன்றிய அரசின் அமைப்பான மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்புக்கும், நியமனத்திற்கும் எதிராக கண்டனக் குரல் எழுப்பி, அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் தடுத்தார்.

அதேபோல, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறாமல் தடுத்து நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதற்கு பெரும் துணையாக இருந்தார். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி 100 நாட்களில் சிறப்பாக பணியாற்றி மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் 100வது நாளில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : TAKING OFFICE ,RAHUL ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,Selvapperundakha ,Rakul Gandhi ,India ,Speaker of the Parliament ,Goodwill ,Dinakaran ,
× RELATED வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்