செங்குன்றம்-நீலாங்கரை இடையே மாநகர பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல், அக். 5: சென்னை புழல், வடகரை, வடபெரும்பாக்கம், பாடியநல்லூர், சோழவரம், நல்லூர், அலமாதி, பொத்தூர், பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 முதல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநகர பேருந்துகளில் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்கின்றனர். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் தடா, வரதபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு, இந்த பழமை வாய்ந்த மிகப்பெரிய செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்து, இங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்னைக்கு சென்று வருகின்றனர். ஆனால், செங்குன்றத்தில் இருந்து சென்னை தலைமை செயலகம், அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரை, அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், நீலாங்கரை, மாமல்லபுரம், செங்கல்பட்டு போன்ற முக்கிய பகுதிகளுக்கு, செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பேருந்து வசதி இல்லை. இதனால் 2, 3 மாநகர பேருந்துகளில் மாறி சென்று மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மாநகர பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று புழல், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்குன்றம்-நீலாங்கரை இடையே மாநகர பஸ்கள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: