ராணுவக் கட்டுப்பாடுடன் இயங்க வேண்டும்: கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார். முன்னதாக மாநாட்டிற்கான துவக்க விழாவாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணியளவில் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது.

The post ராணுவக் கட்டுப்பாடுடன் இயங்க வேண்டும்: கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: