விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் திடீர் விலகல்: மரியாதை இல்லாத இடத்தில் இருக்க விருப்பமில்லை

செஞ்சி, அக். 4: மரியாதை இல்லாத இடத்தில் இருக்க விருப்பமில்லை எனக்கூறி விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2015ல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு, 2018 தொகுதி செயலாளராகவும், 2020ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும்
இருந்தேன்.

2 நாடாளுமன்ற தேர்தல், 2 சட்டமன்ற தேர்தல், 1 உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது, என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள். இல்லாவிட்டால் கிளம்புங்கள், உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை, செலவு செய்யவும் கூறவில்லை என்று சீமான் கூறினார்.

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில், நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ, பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் தான். இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுகிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் திடீர் விலகல்: மரியாதை இல்லாத இடத்தில் இருக்க விருப்பமில்லை appeared first on Dinakaran.

Related Stories: