×

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில் நேற்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மகளிர் ஆணையமும், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து தொகுதி அளவிலான பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.

நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜூலியட் புஷ்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் வழங்கப்படும் அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நடைமுறை அறிவை வழங்குதல், அதன் மூலம் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் சவால்களை எதிர்கொள்வது பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண்களுக்கான அடிப்படை சட்டங்கள், இலவச சட்ட உதவிகள் பெறுவது குறித்தும், தேசிய மகளிர் ஆணையம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு பெண் காவல் நிலையங்கள் போன்ற அமைப்புகளை பெண்கள் எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான தேசிய 24 மணி நேர அவசர கட்டணம் இல்லா தொலைபேசி எண் சேவை பற்றியும், பெண்களுக்கான பாதிக்கப்பட்டோர் நிவாரணம் வழங்குதல், பெண்களுக்கான அரசு நல உதவி திட்டங்கள் பற்றியும், பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு சட்டங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District ,Integrated Court Complex ,Tamil Nadu State Law Commission ,National Commission for Women ,Integrated Court ,
× RELATED ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல்...