மத்திய கிழக்கு, உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வார்த்தைப் போர்: ஜோ பிடன், கமலா ஹாரிசை சாடிய டிரம்ப்

பென்சில்வேனியா: மத்திய கிழக்கு, உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. ஜோ பிடன், கமலா ஹாரிசை டிரம்ப் கடுமையாக சாடினார். அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடப்பதால் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. பென்சில்வேனியாவில் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘பென்சில்வேனியா போன்ற முக்கியமான நகரங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பல வகையான கிரிமினல் வேலைகளை செய்கிறார்கள்; கடைகளில் திருடுகிறார்கள்; கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க, காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய அதிபர் ஜோ பிடனும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸும், இத்தகைய சட்டவிரோதக் குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். என்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ், ‘கருப்பு வேட்பாளர்’ ஆவார். கருக்கலைப்பு சட்ட விதிகளில் மிகவும் கடுமையான விதிகளை வகுக்க வேண்டும். ஆனால் கருக்கலைப்பு பெண்களின் உரிமை என்று கமலா ஹாரிஸ் கூறுகிறார். கமலா ஹாரிஸ் மனநலம் சரியில்லாதவர்; அதிபர் ஜோ பிடனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று பேசினார். அவ்வப்போது நகைச்சுவை உணர்வுடன் பேசியதால் மக்கள் உற்சாகமாக அவரது பேச்சை ரசித்தனர். மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனிலும் போர் சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் வார்த்தைப் போர் தீவிரமாகிறது.

 

The post மத்திய கிழக்கு, உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வார்த்தைப் போர்: ஜோ பிடன், கமலா ஹாரிசை சாடிய டிரம்ப் appeared first on Dinakaran.

Related Stories: