×

அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய 2 பேர் கைது

திருத்தணி: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கிய திருத்தணியை சேர்ந்த 2 வாலிபர்களை திருத்தணி போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்து தடம் எண் 212 எச் பேருந்தில் கடந்த சனிக்கிழமையன்று நடத்துனராக அன்பரசு(42), ஓட்டுநராக அன்பு(41) பணியில் இருந்தனர்.

அப்போது, இரவு 9 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பயணிகள் மட்டும் முதலில் பேருந்தில் ஏறி சீட்டில் அமர வேண்டும் என்று பேருந்து நடத்துனர் அறிவிப்பு செய்துள்ளார். அப்போது, அப் பேருந்தில் திருத்தணியை சேர்ந்த 2 வாலிபர்கள் சீட்டில் அமர்ந்துள்ளனர். இதனையடுத்து, நடத்துனர் அன்பரசு திருப்பதி வரை செல்பவர்கள் மட்டுமே பேருந்து இருக்கையில் அமர வேண்டும் என கூறியுள்ளார். இதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தபோது பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை திருத்தணியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் தாக்கியதில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பேருந்து நடத்துனர் அன்பரசு அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருத்தணி திருக்குளம் பகுதியைச் சேர்ந்த மதன்(எ)ஹேமச்சந்திரன்(25), ஜெகன்(எ)ராகேஷ்(25) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Kanchipuram ,Tirupati ,
× RELATED போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து போக்குவரத்து காவலரை தாக்கிய ரவுடி கைது