திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை

திருமங்கலம் செப். 29: திருமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக்கு ஊசி போட்டு கொண்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகேயுள்ள பெரியவடகரை கிராமத்தினை சேர்ந்தவர் முத்துச்செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பஞ்சு. இவர்களது மகள் வாஞ்சியா(10), ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக வாஞ்சியாவிற்கு உடலில் திடீரென உப்புச்சத்து, மற்றும் சர்க்கரை அதிகரித்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று திடீரென கைகால்கள் வீங்கவே பதறியடித்த பெற்றோர் வாஞ்சியாவை திருமங்கலம் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு ஊசி போட்டு, மாத்திரைகள் கொடுத்துள்ளனர். சிறுமியை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போது, வாஞ்சியா திடீரென மயங்கியநிலைக்கு செல்லவே அருகேயுள்ள திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை கேட்ட பெற்றோர் கதறியழுதனர். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: