பெரும்புதூர் மாநகராட்சியில் குடிநீர் பைப்லைன் பதிக்கும் பணிகள் தீவிரம்

பெரும்புதூர், செப்.29: பெரும்புதூர் மாநகராட்சியில் ₹19 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், நகராட்சி பொறியாளர் செண்பகவள்ளி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் ஏராளமான சில்லறை மட்டும் மற்றும் மொத்த வியாபார கடைகள் உள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, சாலையில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் குழாய் பதிக்கப்படாமல் இருந்தது. மேலும், சாலையில் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி தர மறுத்து வந்தது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதி வணிகர் சங்கம் சார்பில், காந்தி சாலையில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று பெரும்புதூர் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ₹19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், காந்தி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பெரும்புதூர் பேருந்து நிலையம் வரை குடிநீர் பைப் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியினை நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், நகராட்சி பொறியாளர் செண்பகவள்ளி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, புதிதாக குடிநீர் பைப் அமைக்க நடவடிக்கை எடுத்த பெரும்புதூர் நகராட்சி தலைவருக்கு, வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post பெரும்புதூர் மாநகராட்சியில் குடிநீர் பைப்லைன் பதிக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: