6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு


சென்னை: சென்னை ஐஐடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பங்கேற்றார். அவர், மாணவர்களிடையே பேசியதாவது: 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகை பின்பற்றியது. 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழும். 1993ம் ஆண்டில் செல்பேசி அறிமுகமானபோது இந்தியாவில் முதன்முதலாக 6 நகரங்களில் மட்டுமே அது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இந்திய அளவில் 117 கோடி கைபேசிகள் செயல்பாட்டில் உள்ளது. இணையதள இணைப்புகளை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25 கோடி இணைப்புகள் இருந்தன.

தற்போது அது 97 கோடியாக அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அகண்ட அலைவரிசை இணைப்புகள் இந்தியாவில் 6 கோடியாக இருந்தது. தற்போது 94 கோடி இணைப்புகள் உள்ளன. பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புரட்சிகரமான திட்டத்தின் காரணமாக இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக மாறும். என்ஐஆர்எப் தர வரிசையில் சென்னை ஐஐடி இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. மாணவர்கள் படித்த நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டும்.

5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. நகர்ப்புற பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் பரவியுள்ளது. இந்தியாவை தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: