பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 51 சவரன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொத்தக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலு(66). இவர் சாலை ஓரத்தில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டிக் கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் வீட்டில் விஜயலு, அவரது மனைவி ஷியாமளா மற்றும் மகன் ஜெயசூர்யா வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அருகே கேஜி. கண்டிகை கிராமத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரும் நேற்று முன்தினம் காலை கேஜி கண்டிகைக்கு சென்றுவிட்டு மாலை விஜயலு வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 51 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது‌. பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் விஜயலு புகார் செய்தார். உடனடியாக திருத்தணி டி.எஸ்.பி.கந்தன் தலைமையில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எஸ்பி சீனிவாச பெருமாள், டிஎஸ்பி கந்தன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால்
கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடு விவசாய நிலத்தில் தனியாக இருப்பதாலும், அப்பகுதியில் வீடுகள் இல்லாத நிலையில் கொள்ளையர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. பொதுவாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை எளிதாக போலீசார் அடையாளம் கண்டு கைது செய்வது வழக்கமாக உள்ளது.

இருப்பினும் கொத்தக்குப்பம் கிராமத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத நிலையில் அப்பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.

The post பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: