நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம்: சென்னை, பெங்களூருவில் விசாரணை

திருவனந்தபுரம்: நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில், பிரபல நடிகர் சித்திக்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளிக்க மறுத்தது. அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 2 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. போலீசார் வேண்டுமென்றே சித்திக்கை தப்ப விட்டுள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டு வருவதால் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் கேரள போலீசார் சித்திக்கை பிடிக்க மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உறவினர்கள் வீடுகள், கொச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் காலியாகக் கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை மற்றும் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சித்திக்கிற்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.

எனவே அவர்களது உதவியுடன் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கேரள போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இரு மாநில டிஜிபிக்களுக்கும் கேரள டிஜிபி இமெயில் மூலம் சித்திக்கின் போட்டோ உள்பட விவரங்களுடன் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் தமிழ் மற்றும் கர்நாடக பத்திரிகைகளில் சித்திக்கின் படத்துடன் விளம்பரம் செய்யவும் கேரள போலீசார் தீர்மானித்துள்ளனர்.

The post நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம்: சென்னை, பெங்களூருவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: