மேட்டுக்கொளத்தூர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள், சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் பகுதியில் இயங்கி ரேஷன் கடைக்கு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வருவதால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்கள், மேட்டுக்கொளத்தூர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்படி, பகுதிநேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மேட்டுக்கொளத்தூர் பகுதியில் புதியதாக பகுதிநேர ரேஷன் கடை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) வெள்ளாரை அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, புதிய ரேஷன் கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில், கொளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முனுசாமி, சங்கர், மாகான்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வரதன், வங்கி செயலர் கிருஷ்ணன், கொளத்தூர் வார்டு உறுப்பினர்கள் திலகா டில்லிபாபு, பாத்திமா மணிகண்டன், தனசேகரன், சங்கர், திமுக கிளை செயலாளர்கள் முருகேசன், சொளந்திரராஜன், பிரகாசம், சின்ன அப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மேட்டுக்கொளத்தூர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: