ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்புவிடம் துப்பாக்கி பறிமுதல்

* கொலை திட்டத்திற்கு சம்பவ செந்தில் வழங்கியதாக பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலைக்கு பயன்படுத்த நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்த ரவுடி புதூர் அப்பு தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் உள்ளன. புதூர் அப்புவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது, புதூர் அப்புவுடன், சம்பவ செந்திலின் கூட்டாளிகள் இருந்துள்ளனர்.

இதன்மூலம் சம்பவ செந்திலின் தொடர்பு கிடைத்துள்ளது. சம்பவ செந்தில் கூறியதன்பேரில், சிலமுறை புதூர் அப்பு வெடிகுண்டுகள் தயார் செய்து கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு முன்பு, சம்பவ செந்தில் வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுக்கும்படி புதூர் அப்புவுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இதன்படி, புதூர் அப்பு, வெடிகுண்டுகள் தயார் செய்துகொடுத்துள்ளார். முதலில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் தரமற்று இருந்ததால் 2வது முறையாக வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் உள்ள ராஜேஷ் என்பவரின் குடோனில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

அதற்கான நேரம் வந்தவுடன் முகிலன், விஜயகுமார் ஆகியோர் மூலம் வெடிகுண்டுகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஓமந்தூரார் மருத்துவமனை அருகே தற்போது தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணா, ஹரிஹரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவர்கள் வெடிகுண்டை பத்திரமாக அருளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொலையாளிகள் வெடிகுண்டை கொண்டு சென்றனர். ஆனால் அதை பயன்படுத்தவில்லை. ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் வெட்டுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அல்லது கூட்டம் சேர்ந்தால் அதை கலைக்க வெடிகுண்டை வீசிவிட்டு பின்னர் வெட்டலாம் என்பதற்காக அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் கொலையாளிகள், திட்டமிட்டபடி எந்த இடையூறும் இன்றி ஆம்ஸ்ட்ராங்கை வெட்ட முடிந்ததால், நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தவில்லை. கொலையாளிகள், சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடும்போது, சில வெடிகுண்டுகளை தவறிவிட்டு சென்றனர். அதனையும், கோடம்பாக்கத்தில் இருந்து சில வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக தான் வெடிகுண்டு கேட்கிறார்கள் என்பது தனக்கு தெரியாது. சம்பவம் நடந்தபிறகுதான் நான் தயாரித்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவானேன், என புதூர் அப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்பவ செந்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கைத்துப்பாக்கி ஒன்றை புதூர் அப்புவிடம் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பிரபல ரவுடி மதுரை பாலாவை கொலை செய்வதற்காக, சம்பவ செந்தில், அந்த துப்பாக்கியை கொடுத்தது தெரியவந்தது. ஆனால், அதை இவர் பயன்படுத்தாமல், அமைந்தகரையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தனிப்படை போலீசார், குறிப்பிட்ட அந்த கடையில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர், புதூர் அப்புவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இந்த வாரம் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்புவிடம் துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: