மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை ஆபாச படமெடுத்து மிரட்டல்: பல லட்சம் ரூபாய், நகை பறித்த பயிற்சியாளர்கள்

மதுரை: மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து வாழ்ந்து வருகிறேன். மூத்த மகன் தனியார் கல்லூரியிலும், இளைய மகன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும் படிக்கின்றனர். இளைய மகனின் விருப்பப்படி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இலவச குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன்.

அங்கு பயிற்சியாளர்கள் அனுப்பானடி, மேலூரை சேர்ந்த 2 பேர் எனது மகனுக்கு குத்துசண்டை பயிற்சி அளித்தனர். பல்வேறு போட்டிகளுக்கும் அழைத்து சென்றனர். மகன் 10ம் வகுப்பு படித்து வருவதால், குத்துச்சண்டை பயிற்சி பற்றி 2 பேரும், எனது செல்போனில் அழைத்து கேட்டனர். அப்போது அண்ணா நகரில் உள்ள எனது தோழி வீட்டில் இருப்பதாக கூறினேன். அங்கு வந்த பயிற்சியாளர்கள் கத்தியை காட்டி சேலையை அவிழ்க்கச் சொல்லி மிரட்டினர்.

அப்போது என்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துச்சென்று விட்டனர். அதை சமூக வலைத்தளங்கள் மற்றும் எனது உறவினர்களுக்கு அனுப்புவதாக மிரட்டியதால், ரூ.4 லட்சம் வரை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர்களது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டேன். ஆனால் மற்றொரு வாட்ஸ் அப் நம்பரில் இருந்து எனது எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் இல்லை எனக்கூறியதால், நேற்று முன்தினம் இரவு என்னை செல்போனில் அழைத்து ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை கொடுத்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்தனர். அதை நம்பி சென்றபோது தங்கச்செயினை கழற்றி தரச்சொல்லி மிரட்டினர். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம்; போலீசில் புகார் அளித்தால் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்வோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை ஆபாச படமெடுத்து மிரட்டல்: பல லட்சம் ரூபாய், நகை பறித்த பயிற்சியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: