சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பிரபல நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக ஒரு நடிகை போலீசில் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கொச்சி மரடு போலீசார் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவருக்கு எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்நிலையில் நடிகர் முகேஷிடம் சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று திடீரென விசாரணை நடத்தினர்.கொச்சியில் வைத்து எஸ்பி பூங்குழலி தலைமையில் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதன் பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே முகேஷ் எம்எல்ஏவுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்ததால் விசாரணைக்குப் பின்னர் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதேபோல், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் சித்திக் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து கடந்த 2016ம் ஆண்டு தன்னை பலாத்காரம் செய்ததாக ஒரு நடிகை புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் பிஎன்எஸ் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இவர் மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சித்திக்கை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொச்சி போலீசுக்கு குற்றப்பிரிவு ஏடிஜிபியும், சிறப்பு விசாரணைக் குழு தலைவருமான வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சித்திக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் முகேஷ் கைது: தலைமறைவான நடிகர் சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.