திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியர் சிறையிலடைப்பு: திருத்தணி மகளிர் போலீசார் நடவடிக்கை

திருத்தணி: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு இளம்பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியரை திருத்தணி மகளிர் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் வெங்கடேசன் (25). பிஇ பொறியியல் பட்டயப்படிப்பு முடித்து வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இவர் கொடிவலசா காலனியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவ்வப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் தனியாக வெளியே அழைத்துச் சென்று வெங்கடேசன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வெங்கடேசனுக்கு மற்றொரு இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்பெண்ணை வெங்கடேசன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக காதலித்து தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெங்கடேசன் மீது கொடிவலசா காலனியைச் சேர்ந்த இளம் பெண் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது அவர் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர் விசாரணை நடத்தினார். இதில் இளம்பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்யாமல் வெங்கடேசன் ஏமாற்றியது உறுதியானதையடுத்து, அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியர் சிறையிலடைப்பு: திருத்தணி மகளிர் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: