நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தார். தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(செவ்வாய்க்கிழமை) திருக்குவளை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை’ 2-ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியின் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட இப்பள்ளியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 193-ஆவது ஆய்வை இன்று மேற்கொண்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், திருக்குவளையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். ‘திருக்குவளையில் ‘முத்துவேலர் நூலகம் அஞ்சுகம் படிப்பகம்’ எனும் பெயரில் செயல்படும் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு அருகே கட்டப்பட்டு வரும் கலைஞர் மையத்தின் கட்டுமானப் பணிகளை, அஞ்சுகம் முத்துவேலர் அறங்காவலர் குழுவின் உறுப்பினர் எனும் முறையில் இன்று பார்வையிட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: