முதியவரை காட்டுயானை தாக்கிய சம்பவம் காந்தளூர் வனத்துறை அலுவலகம் முற்றுகை

மூணாறு, செப். 24: மூணாறு அருகே முதியவரை காட்டுயானை தாக்கிய சம்பவத்தில் காந்தளூர் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ளது மறையூர் கிராமம் வனப்பகுதியால் சூழப்பட்டவை ஆகும். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் புளி பறிக்கச் சென்ற தோமஸ் (73) என்பவரை காட்டு யானை விரட்டி தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காந்தளூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 23 யானைகள் முகாமிட்டுள்ளதாகவும், அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகே ஒரு முதியவரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post முதியவரை காட்டுயானை தாக்கிய சம்பவம் காந்தளூர் வனத்துறை அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: