கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரியர் மூலம் குட்கா கடத்தல்: 300 கிலோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரியர் மூலம் கடத்தப்பட்ட 300 கிலோ குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பாதிரிவேடு, ஆரம்பாக்கம், சிப்காட் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருள் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி, சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மாத காலமாக தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரியர் மூலம் குட்கா கடத்தப்படுவதாக திருவள்ளூர் கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் 5 பேர் கும்மிடிப்பூண்டி – சிப்காட் பகுதி வழியாக வரும் கொரியர் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பிரபல கொரியர் நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த 4 பண்டல்களில் சுமார் 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பின்னர் டிரைவர் மற்றும் கொரியர் டெலிவரி வாங்க வந்த நபரை கைது செய்து சிப்காட் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அதில் ஒருவர் நிதீஷ் குமார்(44) என்பது தெரியவந்தது. இவர் பெங்களூருவில் இருந்து பெரியபாளையம் பனப்பாக்கம் வழியாக கொரியரை வரவழைத்தது தெரியவந்தது. இதில் சிக்கிய மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரியர் மூலம் குட்கா கடத்தல்: 300 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: