புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது

சென்னை: புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சென்னையில் இறைச்சிக் கடைகளில் மட்டன், சிக்கன் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. காசிமேட்டில் மக்கள் கூட்டம் என்பது வெகுவாக குறைந்திருந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீடுகளில் அசைவ உணவு சமைப்பதை வழக்கம். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் முதல் ஞாயிற்றுக்கிழமையும் சிக்கன், மட்டன் விற்பனை மந்தமாகவே இருந்தது.
எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை மக்கள் கூட்டம் இல்லாமல் களை இழந்து காணப்பட்டது.

அதேநேரத்தில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதால் மீன்வரத்து அதிகம் இருந்தது. ஆனால், தேவை குறைவாக இருந்ததால் விற்பனையும் குறைந்து விலை சரிந்து காணப்பட்டது. கடந்த வாரம் வஞ்சிரம் கிலோ ரூ. ரூ.1000க்கு விற்கப்பட்டது. இது இன்று ரூ.850க்கு விற்கப்பட்டது. கொடுவா ரூ.900லிருந்து ரூ.700 ஆகவும், சீலா ரூ.500லிருந்து ரூ.400 ஆகவும், சங்கரா ரூ.600லிருந்து ரூ.500 ஆகவும் விலை குறைந்து காணப்பட்டது.

இதே போல பால்சுறா ரூ.350க்கும், பாறை ரூ.500க்கும், இறால் ரூ.300க்கும் விற்கப்பட்டது. புரட்டாசி மாதம் என்பதால் மீன்விலை கடந்த வாரத்தை விட நேற்று ரூ.100 முதல் 200 வரை விலை குறைவாக விற்கப்பட்டது. அதேபோல், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. விற்பனை குறைந்தாலும் சிக்கன், மட்டன் விலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.

The post புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: