நாட்டின் வான்வெளியை பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இது எடுத்து காட்ட அன்றைய தினம் இந்திய விமானப்படையின் வகைவகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்த விமான கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்த உள்ளன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபட உள்ளன.
இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்த சாகசம் இந்திய விமானப் படையின் வலிமையையும், திறன்களையும், நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கும். இதுபோன்ற வான சாகசக்காட்சி கடந்த ஆண்டு விமானப்படை தினமான அக்டோபர் 8ம் தேதி பிரயாக்ராஜில் உள்ள சங்கம் பகுதியில் நடத்தப்பட்டது, இது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இம்முறை சென்னையில் 15 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு மெரினாவில் விமான சாகச காட்சி: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி appeared first on Dinakaran.