வீட்டு வேலைக்கு வந்தவர் காதல் வலையில் வீழ்த்தினார் எத்தனை திருமணம் பண்ணாலும்… அந்த பெண்தான் எனக்கு வேணும்…போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய டாக்டரின் உறவினர்

நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர், நாகர்கோவில் அருகே உள்ள டாக்டர் வீட்டில் வேலைக்காக சேர்ந்தார். தனியார் நிறுவனத்தின் மூலம் இவரை பணிக்கு நியமித்து இருந்தனர். டாக்டர் வீட்டுக்கு, உறவினர் மகன் அடிக்கடி வருவது உண்டு. அவருக்கு 38 வயதாகிறது. திருமணம் ஆக வில்லை. ஆனால் சொத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த வாலிபருக்கு சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார்.

தாயார் மட்டும் தான் உள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு வேலைக்காக வந்த இளம்பெண், வாலிபரிடம் பழகி நட்பு ஆனார். இவர்கள் காதலர்களாக மாறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து மாயம் ஆனார்கள். இதனால் டாக்டர் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபரை, இளம்பெண் ஏமாற்றி அழைத்து சென்றதாகவும், நகைகளை எடுத்து சென்றதாகவும் கூறினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி, ரகசியமாக குடும்பம் நடத்தி வந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் இளம்பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது. முதல் திருமணம் நடந்து கணவர் இறந்து விட்டார். பின்னர் 2வதாக வேறொரு வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் இவரை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். பின்னர் தனிமையில் இருந்த போது தான் வீட்டு வேலைக்காக வந்து வாலிபருடன் பழகியது தெரிய வந்தது. வாலிபரும், அந்த இளம்பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எத்தனை திருமணம் செய்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை. என்னை புரிந்து கொண்டவள் அவள் தான்…

நாங்கள் சேர்ந்து செல்கிறோம். எனக்கு திருமணம் ஆக வில்லை. எனவே எந்த சட்டசிக்கலும் இல்லை. எங்களை பிரிக்க நினைக்காதீர்கள். நாங்கள் நகை எதுவும் எடுத்து செல்ல வில்லை. எங்களை சேர்த்து வையுங்கள் என கூறி, போலீசார் காலில் வாலிபர் விழுந்தார். இதையடுத்து போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினரும் வேறு வழியின்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர். இந்த வாலிபருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

The post வீட்டு வேலைக்கு வந்தவர் காதல் வலையில் வீழ்த்தினார் எத்தனை திருமணம் பண்ணாலும்… அந்த பெண்தான் எனக்கு வேணும்…போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய டாக்டரின் உறவினர் appeared first on Dinakaran.

Related Stories: