×

திருக்கார்த்திகையை முன்னிட்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்

Agallamps_pollachi*களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், களிமண் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவிபட்டிணம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி, பில்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடக்கிறது. சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, நவராத்திரி கொழுபொம்மை, கார்த்திகையையொட்டி அகல் விளக்கு என முக்கிய விசேஷங்களின் போதும் மண்பாண்டம் தொழில் பரபரப்பாக இருக்கும்.

இதில், ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு தயாரிப்பு பணியில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்கள் ஈடுபட துவங்குவர். இந்த ஆண்டில் வரும் நவம்பர் 16ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குகிறது. டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தீப வழிபாடு நடக்கிறது. தற்போது மழை குறைவால், கார்த்திகை மாதத்திற்கு தேவையான அகல் விளக்கு தயாரிப்பு பணியை, மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிலும் இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அகல்விளக்கு தயாரித்து உலர வைக்கும் பணியை தொழிலாளர்கள் தீவிரமாக்கியுள்ளனர். ஆனால், அகல் விளக்கு தயாரிப்பதற்குண்டான உரிய தரமான களிமண் கிடைக்காமல் அகல் விளக்கு தயாரிக்கும் பணிக்கான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அகல் விளக்கு விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுகின்றனர். சமையலுக்கு தேவையான பானை மற்றும் பொம்மை, அகல்விளக்கு உள்ளிட்டவை தயாரிப்பதற்காக, கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முறையாக அனுமதிபெற்று களிமண் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கோதவாடி குளத்திலிருந்து களிமண் எடுக்க கெடுபிடி அதிகரித்தது. இதனால், முறையான களிமண் கிடைக்காமல் உள்ளது. களிமண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

வரும் திருக்கார்த்திகையையொட்டி அதற்கான அகல் விளக்கு தயாரிக்கும் பணியை இரண்டு மாதத்திற்கு முன்பாகவே துவங்கியுள்ளோம். கடந்த ஆண்டு, 12 எண்ணம் கொண்ட ஒரு டஜன் அகல் விளக்கு ரூ.12 முதல் ரு.14 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு டஜன் அகல் விளக்கு ரூ.15 முதல் 18 வரை விற்பனை செய்யப்படுகிறது. போதிய களிமண் கிடைக்க பெறாமலும், கூடுதல் விலை இல்லாமல் தவிர்க்க வேண்டியதாக உள்ளது.மேலும், ஆண்டு தோறும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் இன்னும் பல பேருக்கு கிடைக்க பெறாமல் உள்ளது. அதனை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த ஆண்டு முதல், மண்டபாண்ட தொழிலாளர்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post திருக்கார்த்திகையை முன்னிட்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi Circle ,Pollachi ,Thirukarthikai ,R. Ponnapuram ,Muttur ,Vadakipalayam ,Kotur ,Odayakulam ,Devipattinam ,Pollachi Circuit ,
× RELATED கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை...