×

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள், படை முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை : போர் பதற்றம் அதிகரிப்பு!!

ஜெருசலேம் : லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மற்றும் படை முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேரடி தாக்குதல்களை தொடங்கி இருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று லெபனானில் இருந்து இயங்கி வரும் பாலஸ்தீன ஹமாஸ் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பேஜர்கள் பயங்கரமாக வெடித்துச் சிதறின.

மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பினர் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கி கருவிகளும் வெடித்துச் சிதறின. இந்த 2 தாக்குதல் சம்பவங்களிலும் 37 பேர் உயிரிழந்தனர். 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு பிரிவான மொஸாடுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது ட்ரோன் குண்டுகள் மூலமாக நேற்று சரமாரி தாக்குதல்களை மேற்கொண்டது.

இதனால் 2 நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், லெபனான் மீது நேரடி தாக்குதல்களை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தன. இது தொடர்பான செயற்கைகோள் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காளாண்ட், புதிய போர் ஒன்றின் தொடக்கக் கட்டத்தில் தங்கள் ராணுவம் இருப்பதாக பதிவிட்டுள்ளார். லெபனானின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா பதிலடி தர தயாராகி வருவதால் 2 நாடுகளிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள், படை முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை : போர் பதற்றம் அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Lebanon ,Hizbullah Organization ,Israel ,Jerusalem ,Hezbollah ,Lebanon's ,Hezbollah Organization ,Israel Army ,Dinakaran ,
× RELATED லெபனானில் நடைபெற்ற பேஜர்...