×

மாம்பலம் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்கி இளம்பெண் ரகளை: ஆவணங்களை கிழித்து, கணினியை உடைத்தார்

சென்னை: மாம்பலம் காவல் நிலையத்தில் புகுந்து, பணியில் இருந்த பெண் காவலரை தாக்கி, வழக்கு ஆவணங்களை கிழித்து, கணினியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சட்டம் ஒழுங்கு காவலர் சங்கவி (27) பணியில் இருந்தார். மற்ற காவலர்கள் ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். அப்போது ஆட்டோவில் வந்த பெண் ஒருவர், தனது குடியிருப்பின் வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளதாக கூறி, பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், காவல் நிலைய மேஜையில் இருந்த இரும்பு ஸ்கேலை எடுத்து காவலர் சங்கவியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். அதோடு இல்லாமல் காவல் நிலையத்தில் இருந்த வழக்கு தொடர்பான கோப்புகையும் கிழித்து எறிந்துள்ளார். மேலும், கணினியையும் உடைத்துள்ளார். இதுபற்றி பெண் காவலர் உடனே ரோந்து பணிக்கு சென்ற காவலர்களை தொடர்பு கொண்டு கூறினார். அதன்படி விரைந்து வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து விசாரணை நடத்திய போது, தி.நகர் பகுதியை சேர்ந்த இன்சியா (30) என்பதும், வழக்கறிஞரான இவர், 2 வருடங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் இறந்த காரணத்தால் தனிமையில் இருந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், நேற்று முன்தினம் தி.நகரில் இருந்து திருவொற்றியூருக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோவுக்கு பணம் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்த போது, அவரது குடியிருப்பு வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்ததால், காவல் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தது தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் வழக்கு தொடர்பான கோப்புகளை கிழித்து எறிந்தது, பெண் காவலரை தாக்கியதால் பெண் வழக்கறிஞர் இன்சியாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

* பெண் போலீசிடம் தகராறு
பட்டாளம், ராமானுஜ கார்டன் தெருவில் வசித்து வருபவர் சுதா (30). இவர் புளியந்தோப்பு போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது போதையில் நின்றிருந்த ஒரு நபர், சுதாவைப் பார்த்து அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் தகாத வார்த்தைகளால் பேசி வீண் தகராறு செய்துள்ளார். உடனடியாக சுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போதை ஆசாமியை பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் பட்டாளம் சி.ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (31) என்பதும், இவர் மதுரவாயல் மீன் மார்க்கெட் பகுதியில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மாம்பலம் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்கி இளம்பெண் ரகளை: ஆவணங்களை கிழித்து, கணினியை உடைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mambalam ,CHENNAI ,Mambalam police station ,Police Station ,
× RELATED சென்னையில் காவல்நிலையத்தில்...