சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.சுமாா் 80- க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனர்.

அப்போது, கோவிந்தராஜ்(25) என்பவர் லோட் ஆட்டோவில் இருந்து பட்டாசுக்கு தேவையான மூலப்பொருள்கள் தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் இறக்கி வைத்துள்ளார். அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி கோவிந்தராஜ் கட்டட ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு தொழிலாளி திருத்தங்கல்லை சேர்ந்த குருமூர்த்தி(20) பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட மற்ற தொழிலாளிகள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரான பாலமுருகன் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் கபில்ராஜ் கைது செய்யப்பட்டார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: