வாழ்வினை செதுக்கும் சிற்பிகள்

‘‘ஃபேனை ஆப் பண்ணாமல் வௌியே வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி ஓடுகிறது பார், பேனா கீழே கிடக்குது பார், ஸ்டாண்டில் வை’’ இப்படி சின்ன சின்ன விஷயத்திற்கும் அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்கு துளியளவும் பிடிக்கவில்லை. ஆயினும் வேறு வழியின்றி நச்சரிப்பு தாங்ககூடாமல் செய்வான். நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். இனி அப்பாவின் நச்சரிப்பு குறையும் என மனதில் எண்ணிக் கொண்டே நேர்காணலுக்குக் கிளம்பினான்.

நேர்காணலுக்குச் சென்றான். அங்கே கட்டடத்தின் மெயின் கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது. அதைச் சரி செய்து கதவை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச் செடிகள் வரவேற்றன. தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்கொண்டிருந்ததைக்கண்ட அவன், குழாயை கையில் எடுத்து செடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. ‘‘விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?’’ என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் கேட்க, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ‘வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே தன் காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் அவசியமின்றி சுற்றிக் கொண்டிருந்தன.

‘‘யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?’’ என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான். பின்னர், இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவைக்கப்பட்டனர். இவனை அழைத்தபோது கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான். சான்றிதழ்களை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலேயே ‘‘நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

என்ன என்று தெரியாமல் குழம்பி நின்றான் மகன்.

‘‘என்ன யோசிக்கிறீர்கள்? கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்துவிட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்! இங்கு வந்த எந்த இளைஞருமே, தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர்தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். அதனால்தான் நாங்கள் உங்களைத் தேர்வு செய்திருக்கிறோம்’’ என்றார் நேர்க்காணல் அதிகாரி.
இறைமக்களே, முதியோர்கள் அல்லது மூத்தவர்களின் கண்டிப்புகள் சில தருணங்களில் நமக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் தான் நம்மையும் அறியாமல் நம்மை மனிதராக்குகிறது.

‘‘முதியோரிடத்தில் ஞானம் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே’’ (யோயு 12:12) என்று இறைவேதம் கூறுகிறது. ஆகவே முதியோர்கள், மூத்தோர்களின் கண்டிப்பும், ஆலோசனைகளும் நமது வாழ்வினைச் சீர்பட செதுக்கும் காரணிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.

The post வாழ்வினை செதுக்கும் சிற்பிகள் appeared first on Dinakaran.

Related Stories: