தாய், 2 மகன்களை இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் டைல்ஸ் தொழிலாளி கைது செய்யாறு அருகே

செய்யாறு, செப். 19: செய்யாறு அருகே தாய், 2 மகன்களை இரும்பு ராடால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த டைல்ஸ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த செங்கட்டான்குண்டில் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(26), கிராம உதவியாளர். இவரது தம்பி அஜித்(24), அறுவடை இயந்திர டிரைவர். இவர்களது எதிர்வீட்டை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்(29), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. கடந்த 15ம் தேதி மாலை கோபிகிருஷ்ணனும், அஜித்தும் அருகே உள்ள அரசுபள்ளி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது மதுபோதையில் இருந்த கோபிகிருஷ்ணன், அஜித்தை தாக்கினாராம்.

இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அன்றிரவு கோபிகிருஷ்ணன், அஜித் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசியதுடன், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தாராம். இதை அஜித் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கோபிகிருஷ்ணன், தான் வைத்திருந்த இரும்பு ராடால் அஜித்தை சரமாரி தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற விஜய், அவரது தாயார் தனலட்சுமி ஆகியோரையும் சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அஜித் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து விஜய் மோரணம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குபதிவு செய்து கோபிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தாய், 2 மகன்களை இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் டைல்ஸ் தொழிலாளி கைது செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Related Stories: