×

பட்டாபிராம் பகுதியில் ₹52 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு வழிப்பாதை வரும் 25ம் தேதி திறப்பு: நேரில் ஆய்வு செய்தபின் கலெக்டர் பேட்டி

ஆவடி, செப். 19: பட்டாபிராம் பகுதியில் ₹52 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தபின் தெரிவித்துள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் கலெக்டர் தலைமையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை குறிப்பிட்ட வட்டத்தில் தங்கி அரசு சேவைகள், நடைபெறும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வில் பெறப்படும் கருத்துகள் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்குதல், திட்டங்களை விரிவுபடுத்துதல், மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, ஆவடி வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் இந்த முகாம் நேற்று காலை தொடங்கியது. இதில், திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம், லட்சமிபதி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதியகுளம் அமைக்கும் பணி, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகள் கட்டும் பணி, திருநின்றவூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நடுக்குத்தகையில் அங்கன்வாடி மையம், பாலவேடில் புதிய நூலகம் கட்டும் பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கொள்முதல் நிலையம் ஆகியவற்றை கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னையை இணைக்கும் விதமாக, பட்டாபிராம் எல்.சி. 2 ரயில்வே கடவுப்பாதையில், ₹52.11 கோடி மதிப்பில், கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்படும் மேம்பாலத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பின் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், பட்டாபிராம் மேம்பாலத்தில் சிறிய ஒரு பகுதியைத் தவிர, மற்ற பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி வரும் 25ம் தேதி மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின், ரயில்வே கேட் மூடப்பட்டு, மீதமுள்ள பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார். கொசவன்பாளையம், லட்சமிபதி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதியகுளம் அமைக்கும் பணி, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகள் கட்டும் பணி உள்ளிட்டவைகளை ஆய்வு கலெக்டர் செய்தார்.

The post பட்டாபிராம் பகுதியில் ₹52 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு வழிப்பாதை வரும் 25ம் தேதி திறப்பு: நேரில் ஆய்வு செய்தபின் கலெக்டர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pattabram ,Collector ,Prabhushankar ,Pattabiram ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுரையில் விடுதிகளை மீறிய கட்டடங்கள்...