நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என கேட்ட நிலையில் ‘கூல் லிப்’நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: கூல் லிப் போதைப்பொருளை தயாரிக்கும் வெளிமாநில நிறுவனங்களுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்களிடம், ‘‘தமிழ்நாட்டில் கூல் லிப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற பொருட்களுக்கு தடை இருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கு இவற்றை தயாரிப்போரிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம்போல் செயல்பட தொடங்கி விடுகிறது.

கூல் லிப் போதைப்பொருளை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று செப். 20க்குள் தெரிவிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.இந்த வழக்கில் நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘ஹரியானா மாநிலம் சோனேபேட், கர்நாடக மாநிலம் தும்கூர் மற்றும் அந்தரசனஹள்ளி ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்’’ என்றார். பின்னர் இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

The post நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என கேட்ட நிலையில் ‘கூல் லிப்’நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: