சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

சென்னை: வறண்ட வானிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி இருந்தது. அதேபோல் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும் சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையும் பெய்துள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 20 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், இருப்பினும், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும் வெயில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Related Stories: