அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி

கலசபாக்கம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்(55), மனைவி வளர்மதி(52), மருமகள் ஜெயந்தி(22), பேத்தி ரிதன்யா(2). இவர்கள் காரில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தேவிகாபுரம் அடுத்த ஊத்தூர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு அருகே, திருவண்ணாமலையில் இருந்து போளூர் சென்ற அரசு பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, எதிரே ஞானசேகரன் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதி, சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் கார் டிரைவர் கோபிநாத்(45), வளர்மதி ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். ஞானசேகர், ஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். குழந்தை ரிதன்யா காயமின்றி தப்பியது. மேலும், கார் மோதியதில் எதிரே பைக்கில் வந்த வேலு(50) என்பவர் படுகாயமடைந்தார்.

* கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐடி ஊழியர் சாவு
சிவகங்கை, பையூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). சென்னை ஐ.டி நிறுவன ஊழியர். இவர் நண்பர்களான கோவை ஐடி நிறுவன ஊழியர் கலாநிதி (33), மற்றும் லோகேஷ் ஆகியோருடன் காளையார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த விழாவிற்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் சிவகங்கை திரும்பி கொண்டிருந்தனர். காளையார்கோவில் அருகே, கொல்லங்குடி பகுதியில் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், கார்த்திக், கலாநிதி இருவரும் பலியாகினர். லோகேஷ் படுகாயமடைந்தார். மேலும் காரில் அழைத்துச் சென்ற வளர்ப்பு நாயும் உயிரிழந்தது.

The post அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: