நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

அகமதாபாத் : நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. அகமதாபாத் – புஜ் இடையேயான குளிர்சாதன வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கி வைக்கப்படுகிறது. முன்பதிவில்லா வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவைக்கான டிக்கெட்டுகளை பயணத்துக்கு சற்று முன்பு பெற முடியும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே மெட்ரோ 360 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் 5 மணி 45 நிமிடங்களில் கடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புஜ்ஜில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த காலை ரயில், காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை சென்றடையும்.

இதனிடையே குஜராத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. எரிசக்தி, சாலைகள், வீட்டு வசதித்துறை உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். காந்தி நகர் மற்றும் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி. மேலும் சமகியாலி – காந்திதாம் மற்றும் காந்திதாம் – ஆதிப்பூர் ரயில் பாதைகளை நான்கு மடங்காக மாற்றுவது, அகமதாபாத்தில் உள்ள ஏ.எம்.சியில் பாரம்பரிய சாலைகளை மேம்படுத்துவது, பக்ரோல், ஹதிஜான், ரமோல் மற்றும் பஞ்சர்போல் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

30 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 35 மெகாவாட் பி.இ.எஸ்.எஸ் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தையும், மோர்பி மற்றும் ராஜ்கோட்டில் 220 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையை பிரதமர் தொடங்கி வைப்பார்.பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார், இந்த வீடுகளுக்கான முதல் தவணையை விடுவிப்பதுடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளையும் தொடங்கி வைப்பார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் ஊரகப் பிரிவுகளின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும் மாநிலத்தின் பயனாளிகளுக்கு அவர் வழங்குவார்.

The post நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: