ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க தடை

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், அங்குள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,629 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள ஐவர்பாணி, மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் அதிக அளவில் பாய்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், குளிக்க தடை விதிப்பால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 13,217 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,629 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 111.75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 111.19 அடியானது. நீர் இருப்பு 80.11 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: