மூடநம்பிக்கை பேச்சாளரை பள்ளிக்கு அழைத்தது யார்? தலைமை செயலாளர் விசாரணை: பதில் அளிக்க இன்று வரை ‘கெடு’

சென்னை: அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநர் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பள்ளிக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டனர்.

மகாவிஷ்ணுவை, அரசுப் பள்ளிகளுக்கு பேசுவதற்காக பரிந்துரை செய்தது யார் என்று தலைமைச் செயலாளர் கேட்டுள்ளார். ஆனால் தற்போது வரையில், பரிந்துரை செய்த நபர் குறித்த விவரம் தெரியவரவில்லை. அதனால் தலைமைச் செயலாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார் என்று பதில் அளிக்க இன்று வரை கெடு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக் கல்வி்த்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பேரில் எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட விசாரண நடந்தது. இந்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார், அனுமதி அளித்தது யார்., என்று கேட்கப்பட்டன.

இதற்கு யாரும் சரியான பதில் தெரிவிக்கவில்லை. அதனால் நாளை (10ம் தேதி) காலை வரையில் அவர்கள் பதிலளிக்க கெடு வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் உரிய பதில் தெரிவிக்காததால் விசாரணை முடிக்க காலதாமதம் ஆகிறது. அதனால் நாளை காலைக்குள் எழுத்துப் பூர்வமாக விடையளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

The post மூடநம்பிக்கை பேச்சாளரை பள்ளிக்கு அழைத்தது யார்? தலைமை செயலாளர் விசாரணை: பதில் அளிக்க இன்று வரை ‘கெடு’ appeared first on Dinakaran.

Related Stories: