ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தி. 97.6 சதவீதம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
மயிலாப்பூர் மாணவர் விடுதிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.44.50 கோடியில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி, ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நீலகிரி போன்ற பெரு நகரங்களில் நவீன முன்மாதிரி விடுதிகள் அறிவிக்கப்பட்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1100லிருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை மொத்தமுள்ள 19 விடுதிகளுக்கு இரண்டு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் கல்லூரி மாணவர் விடுதிக்கு தினந்தோறும் சைதாப்பேட்டை எம்.சி ராஜா மாணவர் விடுதியில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியான அளவு மற்றும் தரத்தில் உள்ளதா என்பதை கண்காணிக்க ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினந்தோறும் அச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது இது சரிதானா என்பதனை அவ்விடுதியில் தங்கியுள்ள மாணாக்கர்களே சரிபார்க்க முடியும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தி. இதுவரை 97.6 சதவீதம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதிமுக பொதுச்செயலாளரின் அறிக்கையானது அடிப்படை ஆதாரங்கள் இல்லாததாகவும் திசை திருப்பும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: