ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

ஹூலுன்பியர்: சீனாவின் ஹூலுன்பியர் நகரில் 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. கொரியா-ஜப்பான் இடையிலான முதல் ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கிலும், மலேசியா-பாகிஸ்தான் இடையிலான 2வது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கிலும் டிரா ஆனது. இந்நிலையில் 3வது ஆட்டத்தில் நேற்று நடப்பு சாம்பியன் இந்தியா, போட்டியை நடத்தும் சீன அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 14வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து முதல் பாதியின் 27வது நிமிடத்தில் உத்தம் சிங் தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதனால் முதல் பாதியில் இந்திய 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் சீனாவின் போராட்டம் பலன் தரவில்லை. பந்து பெரும்பாலும் இந்திய வீரர்கள் வசம்தான் இருந்தது. அதன் பலனாக 32வது நிமிடத்தில் அபிஷேக் சர்மா கோலடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

இந்தியா தரப்பில் அடித்த 3 கோல்களும் களத்தில் இருந்து அடிக்கப்பட்ட ஃபீல்டு கோல்கள்தான். அதன் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த 4பெனால்டி கார்னர் உட்பட 5வாய்ப்புகளில் ஒன்றைக் கூட கோலக்க முடியவில்லை. சீனாவுக்கு கிடைத்த 4 பெனால்டி வாய்ப்புகளும் அதேபோல் வீணாகின. அதனால் ஆட்டத்தின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்திய இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: