மீனவர் பிரச்னைக்கான தீர்வு ஒன்றிய அரசிடம்தான் உள்ளது: துரை வைகோ திட்டவட்டம்

மதுரை: தமிழக மீனவர் பிரச்னைக்கான தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது என்று மதுரையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மதிமுக நிர்வாகிகளான பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் குடும்பத்திற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ரூ.45 லட்சம் நிதி வழங்கி பேசுகையில், ‘‘மதிமுக பொதுக்குழு முடிந்து காலையில் புறப்படுவதாக சொன்னவர்கள் இரவே கிளம்பி நடக்கக்கூடாத நிகழ்வு நடந்து விட்டது.

தயவு செய்து இரவுநேர பயணங்களை தவிர்க்க வேண்டும்’’ என்றார். பின்னர் நிருபர்களிடம் துரை வைகோ கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பாடத்திட்டத்தை குறை கூறியுள்ளார். அவர் ஆர்எஸ்எஸ், பாஜ, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு கல்விமுறையை குற்றம் சுமத்தி வருகிறார். தமிழ்நாடு கல்விமுறை சர்வதேச அளவில் சிறந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள், உலகப்புகழ் பெற்ற மருத்துவர்கள் அனைவரும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் தான்.

அவர் வேண்டுமென்றே தமிழ்நாடு கல்விமுறையை குற்றம்சாட்டுவதை தொடர்கிறார். தமிழக மீனவர் பிரச்னைக்கான தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. முதல்வர் கடிதம் எழுத முடியும். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது‌. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நான் பேசி இருக்கிறேன். ஒன்றிய அரசு இப்பிரச்னையில் இலங்கை அரசை பணிய வைக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post மீனவர் பிரச்னைக்கான தீர்வு ஒன்றிய அரசிடம்தான் உள்ளது: துரை வைகோ திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: