×

விநாயகருக்கு சொர்ணக் கொம்பு காணிக்கை!

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஊரிலும் வேறு எந்த ஆலயங்கள் இல்லை என்றாலும், விநாயகருக்கு மட்டும் சிறிய அளவில் கோயிலைக் காண முடியும். ஏன் தெரு முனையில், அரச மரத்தடியில், குளக்கரை, ஆற்றங்கரை என அவர் இல்லாத இடங்களே இருக்காது. தனி ஆலயங்கள் என்று இல்லாவிட்டாலும் சிவன், அம்மன், முருகன் கோயில்களில் கண்டிப்பாக அவருக்கு என தனி சந்நதி உண்டு. அதில் கேரளாவில் திருவனந்தபுரம் பழவங்காடி, கொல்லம் கொட்டாரக்கரா, கோட்டயம் மல்லியூர், திருச்சூர் கக்காடு, காசர்கோடு மதூர் போன்ற இடங்களில் உள்ள விநாயகப் பெருமான் ஆலயங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

இந்த வகையில் கேரள மாநிலம் கன்னூரில் வேளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரர்-ஸ்ரீவைத்தியநாதர் என்ற சிவனார் ஆலயத்தில், விநாயகப் பெருமான் தெற்கு நோக்கி தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். இரண்டு சிவ சந்நதிகள் இருப்பினும், இந்த விநாயகப் பெருமான் தனிச் சிறப்பு கொண்டவர் என்பதால் இக்கோயிலை வேளம் ஸ்ரீமஹாகணபதி ஆலயம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிள்ளையார்பட்டி ஆலயத்தில் ஸ்ரீஅர்ஜுனபுரீஸ்வரர் திருநாமத்தில் மூலவர் சிவபெருமான் எழுந்தருளியிருந்தாலும் அனைத்துச் சிறப்பும் விநாயகருக்கே என்பது குறிப்பிடத்தக்கது. வேளம் ஸ்ரீமஹாகணபதி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு சொர்ணக் கொம்பினை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

விநாயகரின் மகத்துவம்!

தளிப்பரம்பா ராஜராஜேஸ்வரர் ஆலயம், கேரளத்தின் பிரபலமான 108 ஆலயங்களில் ஒன்று. திருச்சூர் வடக்குந்நாதர், வைக்கம் மற்றும் எட்டுமானூர் மஹாதேவர் போன்ற ஆலயங்களுக்கு நிகராகக் கருதப்படும் இந்த ஆலயம், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது. மூஷிக வம்சத்து மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு, விரிவாக்கம் பெற்ற இந்த ஆலயத்தில் கொடிமரம் இல்லை. அகஸ்தியர் மூலமாக, இந்த ஆலயத்தில் சதசோமனால் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

ராஜராஜேஸ்வரர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பக்தர்கள் பெருந்திருகோவிலப்பன், பெருஞ்செல்லூரப்பன், தம்புரான் என்று மரியாதையோடு அழைக்கின்றனர். இவ்வளவு அரிய சிறப்புகளைக் கொண்ட ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் இயற்கை சூழலில் உள்ள கிராமம்தான் வேளம். மஹாபாரத காலத்தில் பகாசுரனை பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் இத்தலத்தில் வைத்துதான் வதம் செய்தாராம். ‘பகனைக் கொன்ன பஹுளம்’ என்ற பெயரே வேளம் என்று உருமாறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். வேழம் என்ற யானையின் பெயரே வேளம் என்று மருவிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

பரசுராமர், கேரளத்தில் சிவாலயங்கள் மற்றும் வைணவ தேவி ஆலயங்களைப் பிரதிஷ்டை செய்ததோடு, வேதவிற்பன்னர்களாகத் திகழ்ந்த எண்ணற்ற அந்தணர் குடும்பங்களையும் குடியேற்றினார். இவர்கள் அனைவரும் ஸ்ரீராஜராஜேஸ்வரரையே தங்கள் முழுமுதற் கடவுளாக வணங்கி வந்தார்கள். மேலும் அவர்களுக்கு மட்டுமே ஆலயத்தின் மீது முழு உரிமையும், ஆலய மணியை அவர்களில் ஒருவரே அடிக்கலாம் என்ற நியதியும் இருந்தது.

இந்த சமயத்தில் ஒருமுறை வேளம் கிராமத்திலிருந்து வந்த சில அந்தணர்கள் தங்கள் ராஜராஜேஸ்வரரை தரிசிக்க வந்தனர். அவர்களில் ஒருவர் சந்நதி நுழைவாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த மணியை பயபக்தியுடன் அடித்து வழிபட, தளிப்பரம்பா அந்தணர்கள் வெகுண்டு அவரை வெளியேற்றினர். அவமானத்தால் வருந்திய அந்தணர் வேளம் கிராமத்திற்கு திரும்பியவுடன் அங்கு தளிப்பரம்பா போன்றே ஒரு ஆலயம் அமைக்க உறுதி பூண்டார்.

வேளம் திருத்தலத்தில் மிகப் பழமையான வைத்தியநாதர் ஆலயம் இருந்தது. அங்குள்ள சிவபெருமானிடம் ஆணை பெற்று சிவபெருமான் சந்நதிக்கு வடபுறம் ஓர் அழகிய ஆலயம் எழுப்பி, ராஜராஜேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். இதை அறிந்த தளிப்பரம்பா அந்தணர்கள் ஆலயம் அமைப்பதை தடுக்க பல இடையூறுகள் செய்தனர். எந்த வித இடையூறுகள் ஏற்படாமல் ஆலயம் அமைக்க தெற்கு புறம் உள்ள சந்நதியில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானை வணங்கி, அவருக்கு கலசாபிஷேகம் செய்து, சிவாலயப் பிரதிஷ்டையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

வேளத்தில் ராஜராஜேஸ்வரரை பிரதிஷ்டை செய்யும் போது ஏற்பட்ட விக்னங்களை களைந்து பக்தருக்கு அருளியதால் இந்த ஆலயத்தில் ஸ்ரீமஹாகணபதியே பிரதான மூர்த்தியாக வழிபடப்படுவதோடு, அவர் பெயராலேயே இந்த சிவாலயம் அழைக்கப்படலாயிற்று. அங்கு ஏற்கெனவே இருந்த ஸ்ரீவைத்தியநாதர் ஆலயம் 2000 ஆண்டுகளும் அடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயம் 1000 ஆண்டுகளும் தொன்மையானவை. ஆலயத்திற்கு வெளியே உள்ள புஷ்கரணி, திருப்பணி செய்யப்பட்டு 2016ல் மஹாசிவராத்திரியின் போது திறக்கப்பட்டது.

கேரள ஆலயங்களுக்குரிய மிக விசாலமான திருச்சுற்று, பெலிக்கல்புரா என்ற பலிபீடம், உட் பிராகாரம், நமஸ்கார மண்டபம், கருவறைகள் என்று அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஸ்ரீவைத்தியநாதரும், அவருக்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வர ஸ்வாமியும் கிழக்கு நோக்கி அருட்பாலிக்கின்றனர். உட் திருச்சுற்றில் தெற்கு நோக்கி வேளம் மஹாகணபதிக்குத் தனி ஆலயம் பலிபீடத்துடன் அமைந்துள்ளது. இவரை இங்குள்ள பக்தர்கள் தட்சிணாமூர்த்தியின் அம்சமாக வழிபடுகின்றனர். வைத்தியநாதர் சந்நதியின் மேற்குதிசை நோக்கி ஸ்ரீபார்வதி தேவி, அன்னபூர்ணா தேவியின் அம்சமாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கு கிருஷ்ணருக்கும் தனிச் சந்நதி உள்ளது.

வேளம் ஸ்ரீமஹாகணபதிக்கு ‘சொர்ணக் கொம்பு’ சமர்ப்பித்து வழிபடுவது இந்த ஆலயத்திற்கே உரிய ஒரு பிரத்யேக அம்சமாகும். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கொம்புகளை 5, 7, 11 என்ற எண்ணிக்கைகளில் விநாயகரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறார்கள். விநாயகர் முன் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறியவுடன் பாயசம் நைவேத்தியம் செய்கின்றனர். திருமணத்திற்கு வேண்டிக் கொண்ட பக்தர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் முன்பாக முதலில் இந்த ஆலயத்திற்கு வந்து விநாயகருக்கு 21 கதலிப் பழங்கள் கோர்க்கப்பட்ட மாலையை காணிக்கையாக்குகின்றனர்.

வட்டலப் பாயசம் என்றழைக்கப்படும், பெரிய உருளியில் தயாரிக்கப்படும் வெல்லப் பாயசம் இத்தலத்தின் பிரத்யேக பிரசாதமாகும். கணபதி ஹோமம், சொர்ணக் கொம்பு, பாயச நைவேத்தியம், புஷ்பாஞ்சலி, நெய்விளக்கு போன்றவை இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளாகும். கன்னூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் தளிப்பரம்பாவும், அங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் வேளம் கிராமமும் உள்ளன. கன்னூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆலயம் காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மகி

The post விநாயகருக்கு சொர்ணக் கொம்பு காணிக்கை! appeared first on Dinakaran.

Tags : Supreme God ,Vinayaka Bhuruman ,Kulkarai ,Vinayakar ,
× RELATED வாடகைக்கு எடுத்த காரை ரூ.3...