வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் நாளை காற்றழுத்தம் உருவாகும்

சென்னை: வங்கக் கடலில் நாளை ஒரு காற்றழுத்தம் உருவாகும். அதன் காரணமாக தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி 13 மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ளது. இதற்கிடையே பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நேற்று நிலவியது. மேலும், ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அத்துடன் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 5ம் தேதி (நாளை) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். இதேநிலை 9ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதியை பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை வீசும் வாய்ப்புள்ளது. அதேபோல, தெற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும் வாய்ப்புள்ளது. 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகம் வரை வீசும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது. அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் நாளை காற்றழுத்தம் உருவாகும் appeared first on Dinakaran.

Related Stories: