வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க சென்னை மாநகராட்சிக்கு திருப்புகழ் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு திருப்புகழ் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கேரளா, டெல்லி, மும்பை, போன்ற இடங்களில் அதீத மழையால் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது சென்னைக்கும் அதீத மழை பொழிவு இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளின் படி மழை நீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, கன மழையின் போது மழைநீர் தேங்காமல் சீராக வெளியேற ஏதுவாக வடிகால்வாய்கள், கால்வாய்கள், மற்றும் அடையார், கூவம், கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளையும் தூர்வாரி , வண்டல் , அகாயதாமரை, அகற்றி தயார் படுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை இன்னும் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் எனவும், உயர் அதிகாரிகள் தினந்தோறும் பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்கு முன்னதாகவே சென்னையில் மண்டலத்திற்கு ஒரு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களை கண்டறிந்து தயார் படுத்தி வைக்கலாம் எனவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், மற்றும் மும்பை , டெல்லியை சேர்ந்த அரசு அதிகாரிகளும் காணொளி மூலம் பங்கேற்றனர்.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க சென்னை மாநகராட்சிக்கு திருப்புகழ் ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: