பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

திருவொற்றியூர்: பேரனுக்கு பதிலாக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை எண்ணூர் சத்தியவாணிமுத்து நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம் (65). இவரது பேரன் மகி(26). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜீவானந்தம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதன்காரணமாக கடந்த மே மாதம் ஜீவானந்தம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து மகியை கொலை செய்ய அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகி இல்லாத ஆத்திரத்தில் அவர்கள், மகிக்கு பதிலாக அவரது பாட்டி பாக்கியத்தை வெட்டிக் கொலை செய்து தப்பினர்.

இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து ரவுடி ஜீவானந்தம், அவரது நண்பர்கள் அஜய், விக்ரம் ஆகியோரை கைது செய்தனர். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஜீவானந்தத்தின் சித்தி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தை சேர்ந்த மோகனவள்ளியை (37) தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று உறவினரை பார்க்க எண்ணூருக்கு வந்த மோகனவள்ளியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உள்ளிட்ட குற்றத்துக்காக வழக்குபதிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: