ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் ‘மேரிகோல்டு’: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் பூத்துள்ள மேரிகோல்டு மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இந்த சீசனின்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல் பல ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகளும் காட்சி மாடங்களில் வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். மே மாதம் மலர் கண்காட்சி முடிந்தவுடன் படிப்படியாக பூங்காவில் மலர்கள் குறைந்துவிடும்.

அதன்பின்னர் 2வது சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலர்களை காண முடியும். அதுவரை பூங்காவில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர்களை மட்டுமே ரசிக்க முடியும். மற்ற இடங்களில் மலர்கள் இருக்காது. ஆனால் இம்முறை தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியின் இருபுறங்களிலும் மேரிகோல்டு மலர்கள் பூத்து காணப்படுகிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேரிகோல்டு மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதனருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இன்னும் ஒரு மாதம் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் ‘மேரிகோல்டு’: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: